top of page

தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட கரோனா பாதித்த கர்ப்பிணியை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்கள்:


தனியார் மருத்துவமனையில் முடியாது என கைவிடப்பட்டு கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வலி இல்லாத சுகப்பிரசவம் செய்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த 26 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவர் ஏற்கெனவே 12 ஆண்டிற்கு முன் இதய நோய்க்காக (மைட்ரல் வால்வு சுருக்கம்) அறுவை சிகிச்சை செய்து கொண்டநிலையில் தற்போது இதய பாதிப்பும் ஏற்பட்டு தீவிரமான மூச்சுத்திணறலுடன் பிரசவத்திற்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரது நிலை மோசமானதும் அவவர்கள் இவரைக் காப்பாற்ற முடியாது எனக் கைவிட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

உயிருக்குப் போராடிய அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் அவர் உயிரிழக்க வாய்ப்பு இருந்தது. அதனால், மருத்துவர்கள் அவருக்கு சுகப்பிரசவம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

ஆனால், அதற்குள் அவருக்குப் பிரசவ வலி அதிகமாகி அவரது இதயமும் செயலிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. உடனடியாக வலியில்லாத பிரசவத்திற்கு மருத்துவர்கள் குழு முடிவு செய்து அவருக்கு முதுகு தண்டில் மயக்க ஊசி குறைந்தளவு செலுத்தப்பட்டு வலியைப் போக்கினர். சிறிது நேரத்தில் பிரசவ வலி இல்லாமல் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

2 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு இதய நோயுடன் வந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் செய்து தாயையும், சேயையும் காப்பாற்றிய தாய்நல மருத்துவர்கள் மகாலட்சுமி, திவ்யா, மயக்க மருத்துவர்கள் செல்வகுமார், ஆரோக்கிய மைக்கேல் ராஜா மற்றும் ஸ்ரீ லட்சுமியை மருத்துவக்குழுவினரை டீன் சங்குமணி பாராட்டினார்.

1 view0 comments

Comments


bottom of page