புதுச்சேரியில் இன்று புதிதாக 368 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இளம்பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,762 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.19) கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 1,235 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 328 பேர், காரைக்கால் 4, ஏனாம் 36 என புதிதாக 368 பேருக்கு (29.80 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் 5 பேர் காரைக்காலில் ஒருவர் என 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வைத்திக்குப்பம் செல்வராஜ் செட்டியார் வீதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு இருந்தது. அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது.
கோரிமேடு சிவாஜி நகரைச் சேர்ந்த 55 வயது பெண் உயிரிழந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி ஜிப்மருக்குக் கொண்டுவரப்பட்டார். அதேபோல், வீமன் நகர் ஓடை வீதியை சேர்ந்த 48 வயது ஆண் நபரும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். இவருக்கும் உமிழ்நீர் பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது.
வில்லியனூர் காவேரி நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்த 26 வயது இளம் பெண், முதலியார்பேட்டை அனிதா நகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
மேலும், காரைக்கால் ஜெயா காலனி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 63 வயது முதியவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8,762 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 1,553 பேர், காரைக்காலில் 87 பேர், ஏனாமில் 60 பேர் என 1,700 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,472 பேர், காரைக்காலில் 85 பேர், ஏனாமில் 52 பேர், மாஹேவில் 2 பேர் என மொத்தம் 1,611 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 381 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 18 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,312 (60.63 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58 ஆயிரத்து 535 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 48 ஆயிரத்து 158 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 848 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியருக்குக் கரோனா
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியானது கோவிட் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்கெனவே ஒரு மருத்துவர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை தொடர்ந்து, 2 செவிலியருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மேலும் ஒரு செவிலியருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comentarios